மாநிலங்களின் ஆளுநர், ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும்
Published by
keerthana
11 months ago
ஆளுநர்
ஆளுநரின் பங்கு இந்திய குடியரசுத் தலைவரின் பணியைப் போன்றது. ஆளுநர் குடியரசுத் தலைவரின் அதே கடமைகளைச் செய்கிறார், ஆனால் மாநிலத்திற்கு செய்கிறார். ஆளுநர் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக நிற்கிறார், மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகம் போலவே பணிபுரியும். அரசியலமைப்பின் சரத்து 153 ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் நியமிக்கப்படுவார். பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்படுவார். ஆனால் 1956-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தப்படி ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பணியாற்ற இயலும்.
ஆளுநர் நியமனம்
இந்திய அரசியலமைப்பின் சரத்து 155 இந்த படி இந்தியக் குடியரசுத்தலைரால் ஒரு மாநில ஆளுநர் நியமிக்கப்படுகிறார். ஒரு ஆளுநராக நியமிக்கப்பட கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்:
அவர் இந்தியாவின் குடிமகன்
35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்
ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக் கூடாது
நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது.
ஆளுநர் – பதவி காலம்
ஆளுநரின் பதவிக்கா லம் ஐந்து ஆண்டுகள் ஆகும். (சரத்து-156).
ஒரு ஆளுநர் எந்த நேரத்திலும் குடியரசுத்தலைவரால் பதவி நீக்கப்படலாம் அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றப்பட லாம்.
ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும்
1. நிர்வாக அதிகாரங்கள்
ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத் தலைவர். ஆளுநர் நிர்வாக அதிகாரங்களை நேரடியாகவோ அல்லது அவருக்கு கீழுள்ளவர்களாலோ செயல்படுத்துவார்.
அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் ஆளுநரின் பெயரில் நடத்தப்படுகின்றன. மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி, பிற அமைச்சர்களை அவர் நியமிக்கிறார்.
மாநில அரசின் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார். துணை சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நியமனங்கள், பதவிகள், பதவி உயர்வு போன்றவற்றை ஆளுநர் தீர்மானிக்கிறார்.
மாநில நிர்வாகத்தை சீராக இயக்கும் பொறுப்பு ஆளுநருடையதாகும்.
மாநில அரசமைப்பு இயந்திரம் நிலைகுலைந்து விட்டாலோ அல்லது மாநில நிர்வாகம் அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படாவிட்டாலோ, அரசமைப்பு விதிகளின்படி அரசமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை அரசமைப்பு 356-வது உறுப்பின்படி பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
குடியரசுத்தலைவரது நேரடி ஆட்சி என்றால் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி என்று பொருள்படும். அமைச்சரவை இல்லாத மாநில ஆட்சி என்றும் பொருள்படும்.
2. சட்டமன்ற அதிகாரங்கள்
சட்டமன்றத்தை கூட்டவும், முடித்து வைக்கவும், ஒத்தி வைக்கவும், கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
ஆளுநரின் அனுமதியின்றி, எந்த முன்வரைவும் சட்டமாக்க முடியாது. அது மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் அவரது ஒப்புதலின்றிச் சட்டமாகாது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் முன்வரைவுகள் அவரது ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவற்றிற்கு ஒப்புதலைத் தரவோ அல்லது அந்த முன்வரைவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத்தலைவரின் கருத்திற்காக முன்வரைவை ஒதுக்கி வைக்கவோ முடியும், மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரால் இந்த முன்வரைவுகள் அவை நடுவருக்கு திருப்பி அனுப்ப முடியும்.
முன்வரைவு திருத்தங்கள் இல்லாமலோ அல்லது திருத்தும் செய்தோ மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் தனது ஒப்புதலை அளித்தே ஆகவேண்டும்.
சட்டம் 213-ன் கீழ், சட்டமன்றம் அமர்வில் இல்லாத காலங்களில் ஆளுநர் அவசர சட்டங்களையும் பிறப்பிக்கலாம்.
எனினும், இத்தகைய அவசர சட்டங்கள் தொடர்வதற்கு, அவை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3.நிதி அதிகாரங்கள்
நிதி அமைச்சர் மாநிலச் சட்டமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தை அல்லது நிதிநிலை அறிக்கையை சமர்பிப்பார். ஆனால் எந்த நிதி முன்வரைவும் ஆளுநரின் முன் ஒப்புதலின்றி சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியாது.
ஆளுநரின் பரிந்துரையின்றி மானியங்களுக்கான கோரிக்கை எதுவும் கோரப்பட முடியாது.
மாநிலத்தின் ஒதுக்கு நிதியின் பாதுகாவலர் ஆளுநர் ஆவார். நிதி நெருக்கடியான கட்டங்களில் சட்டமன்றத்தின் முன் அனுமதியின்றியும் அவரால் இந்நிதியை பயன்படுத்த முடியும்.
4. நீதித்துறை அதிகாரங்கள்
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கிளை நீதிமன்றங்கள் உள்ளிட்ட சார்பு நீதிமன்றங்களின் பதவிகள், நியமனங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை ஆளுநர் தீர்மானிப்பார்.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யும் போது அவர் இந்தியாவின் குடியரசுத்தலைவரால் கலந்தாலோசிக்கப்படலாம்.
மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளில் தண்டிக்க தக்கவர்களில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரின் தண்டனையைக் குறைப்பதற்கும் மன்னிப்பு வழங்குவதற்கும், நிறுத்துவதற்கும், விலக்குவதற்கும் அல்லது மாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.