வேதகாலம்: வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது. வேதகாலப் பகுதியோடு தொடர்புடைய பண்பாடு, சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந்த நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகத நாடு போன்ற மகாஜனபதங்கள் என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது. வேதகாலம் தொடர்பான விவரங்களை, இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும். ஹரப்பா பண்பாட்டின் நகரங்கள் கி.மு.1500ம் ஆண்டுகளில் அழிந்தன. இந்தோ-ஆரிய மொழியான வடமொழி பேசுபவர்கள் இந்தோ – ஈரானியப் பகுதியிலிருந்து வடமேற்கு இந்தியாவிற்குள் வடமேற்கு மலைகளிலிருந்த கணவாய்கள் வழியாக நுழைந்தனர்.
வடமேற்கு சமவெளிகளிலும், பஞ்சாப் சமவெளிகளிலும் அவர்கள் தங்கள் ஆரம்ப கால குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் இந்தோ-கங்கைச் சமவெளிக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் கால்நடைகளை வளர்த்தமையால் பசுமையான புல்வெளிகளை தேடிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டுகளில் அவர்கள் வட இந்தியா முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டனர். எனவே வடஇந்தியா ஆரியவர்த்தம் என அழைக்கப்பட்டது.
வேதம் என்ற சொல் ‘வித்’ என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமஸ்கிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பது “உயர்வான அறிவு” என்றும் பொருள்படும்.
• முந்தைய வேதகாலம் அல்லது ரிக்வேத காலம் (கிமு.1500 -கிமு.1000)
• பிந்தைய வேதகாலம் அல்லது இதிகாச காலம் (கி.மு.1000 – கிமு.600)
என வேத காலத்தை இரு வகைகளாக பிரிக்கலாம்.
முந்தைய வேதகாலம் அல்லது ரிக்வேத காலம்(கி.மு.1500-கி.மு.1000)
வேதங்களில் மிக பழமையானது ரிக் வேதம். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும் சிந்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர்.
ரிக் வேதத்தில் ‘சப்த சிந்து’ அல்லது ஏழு நதிகள் பாயும் பகுதி என்ற குறிப்பு வருகிறது. பஞ்சாபில் பாயும் ஜீலம், சீனாப், ராவி, பியாய், சட்லஜ் என்று ஐந்து நதிகளோடு சிந்து மற்றும் சரஸ்வதி ஆகிய ஏழு நதிகளையே இது குறிக்கிறது.
அரச மற்றும் உயர் குடியினரிடையே பலதார மணம் நடைமுறையில் இருந்தது. இல்லப் பொறுப்புகளை கவனித்து வந்த மனைவி முக்கிய சடங்குகளிலும் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பொது அவைகளிலும் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
குழந்தை திருமணமோ உடன்கட்டையேறும் ‘சதி’ வழக்கமோ ரிக்வேத காலத்தில் இல்லை. பருத்தி மற்றும் கம்பளியாலான ஆடைகளை ஆண் பெண் இருபாலரும் அணிந்தனர். இருபாலரும் பல்வேறு வகையிலான ஆபரணங்களை அணிந்தனர்.
கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், கனிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாகும்.
பசு புனித விலங்காக கருதப்பட்டதால் பசு இறைச்சி உண்பதற்கு தடையிருந்தது.
தேரோட்டப் போட்டி, குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் போன்றவை அவர்களது இனிய பொழுதுபோக்குகள்.
மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண் வேலைகள் செய்வது, நூல் நூற்றல், பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்து வந்துள்ளன.
பல குடும்பங்கள் இணைந்து உருவானது கிராமங்கள். கிராமங்களின் தலைவர் கிராமணி. குடும்பத்தின் தலைவர் கிரஹபதி.
பல கிராமங்கள் இணைந்து உருவானது விசு (குழுக்கள்). இதன் தலைவர் விசுவபதி.
பல விசுக்கள் இணைந்து உருவானது ஜனா. ஜனாவின் தலைவன் இராசன். வேத காலத்தில் அரசன் இராசன் என அழைக்கப்பட்டார்.
அரசனின் நிர்வாகத்திற்கு உதவி செய்தவர்கள் புரோகிதர்.
அரசனின் படை தலைவராக இருந்தவர்கள் ராஜகுரு, சேனானி ஆவார்கள்.
வேதகாலத்தில் இருந்த அமைப்பு சபா மற்றும் சமிதி ஆகும். சபா என்பது ஊர்ப் பெரியோர் அடங்கிய அவையாகவும், சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின.
வேதகாலத்தில் கல்வி கற்ற பெண்கள் லோபமுத்திரா, விஸ்வவாரா, கோஷா, சிகாதா, நிவாவாரி, அபலா ஆவார்கள்.
ரிக்வேத காலத்தில் பெரும்பாலும் முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. பரம்பரை வாரிசு முறையே பின்பற்றப்பட்டது.
வேதகாலத்தில் பயன்படுத்திய நாணயம் நிஷ்கா எனப்பட்டது.
வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பானம் சோமபானம் மற்றும் சுரா பானம் ஆகும்.
பார்லி செடியில் இருந்து எடுக்கப்பட்ட பானம் சுரா பானம் ஆகும்.
பெண்கள் அணிந்த உள்ளாடைகள் பெயர் வசாஸ்.
பெண்கள் அணிந்த மேலாடை பெயர் அதிவாசாஸ்.
பெண்கள் இடுப்பில் அணிந்த ஆடை பெயர் நிவி.
முன் வேதகாலத்தில் மக்கள் வணங்கிய கடவுள்கள் அக்னி, வாயு மற்றும் சூரியன்.
பிந்தைய வேதகாலம் அல்லது இதிகாச காலம் (கி.மு. 1000 – கி.மு. 600)
பிந்தைய வேத காலத்தில் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளான பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியன நன்கு வேரூன்றியது. தொழிலின் அடிப்படையில் பல்வேறு கிளை ஜாதிகளும் இக்காலத்தில் தோன்றின.
மகளிர் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் சுருதப்பட்டனர்.
அவைகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற அரசியல் உரிமைசுளையும் கூட பெண்கள் இழந்தனர். சிறார் மணம் பரவலாக வழக்கத்திலிருந்தது. அய்த்ரேய பிராமணம் என்ற நூல் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று குறிப்பிடுகிறது.
அரச குடும்பத்தில் மட்டும் பெண்கள் ஒரு சில சலுகைகளைப் பெற்று வாழ்ந்தனர்.
பிந்தைய வேத காலத்தில் பிரஜாபதி (படைப்புக் கடவுள்) விஷ்ணு (காக்கும் கடவுள்),ருத்ரன்-சிவன் (அழிக்கும் கடவுள்) ஆகிய கடவுள்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
வேள்விகள் தீவிரமாக பின்பற்றப்பட்டதோடு பல்வேறு சடங்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து வேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
பிந்தைய வேத காலத்தின் இறுதிப் பகுதியில் பூசாரிகளின் ஆதிக்கத்துக்கும், வேள்விகள் மற்றும் சடங்குகளுக்கும் பலத்த எதிர்ப்புகள் தோன்றின. இத்தகைய வேள்விகளுக்கு எதிராக தோன்றியதே புத்த, சமண சமயங்களாகும். இந்து தத்துவத்தின் சாரமாக விளங்கும் உபநிடதங்கள் பயனில்லாத இத்தகைய வேள்விகளை ஆதரிக்கவில்லை.
பிந்தைய வேத இலக்கியங்களில், இந்தியா மூன்று பெரும்பிரிவுகளாக குறிக்கப்பட்டுள்ளது.
ஆரியவர்த்தம் -வட இந்தியா
மத்யதேசம்- மத்திய இந்தியா
தட்சிணாபதம் -தென்னிந்தியா
இக்காலத்தில் பல குலங்கள் அல்லது ‘ஜன’ங்கள் ஒன்றிணைந்து ‘ஜனபதங்கள்‘ உருவாயின. அரசின் பரப்பளவு பெருகியதால் அரசரின் அதிகாரமும் அதிகரித்தது. தனது வலிமையைப் பெருக்கும் நோக்கத்துடன் அரசர் பல்வேறு சடங்குகளையும், வேள்விகளையும் செய்தார்.
ராஜசூயம் – முடிசூட்டு விழா
அஸ்வமேதம் – குதிரை வேள்வி
வாஜபேயம் – தேர்ப் போட்டி
ராஜ விஸ்வஜனன், அகில புவனபதி, ஏகரதன், சாம்ராட் போன்ற பட்டங்களையும் அரசன் சூட்டிக் கொண்டான்.
கிராம சபைகள் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தன. பின் வேத காலத்தில் ‘சபா’, ‘சமிதி’ என்ற அவைகள் செல்வாக்கிழந்தன.
இக்காலத்தில் இரும்பின் உபயோகம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மக்கள் மேலும் பல வனங்களை அழித்து விளைநிலங்களைப் பெருக்கினர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்கியது.
புதிய வகை கருவிகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டன. பார்லி தவிர, நெல் மற்றும் கோதுமை பயிரிடப்பட்டன. நிலத்துக்கு உரமிடுதல் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பல்வேறு தொழில்களும் வளர்ச்சியடைந்தன. உலோக வேலைப்பாடுகள் தோல்பொருட்கள், தச்சுத்தொழில், மட்பாண்டங்கள் போன்றவை பெரும் வளர்ச்சியடைந்தன.
உள்நாட்டு வணிகத்தோடு அயல்நாட்டு வணிகமும் பெருகின. கடல் வணிகம் பிந்தைய வேதகாலத்தில் வழக்கிலிருந்தது. பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.வைசியரும் வணிகத்தில் ஈடுபட்டனர்.
‘கணங்கள்’ எனப்பட்ட வணிகக் குழுக்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்.
ரிக்வேத காலத்திலிருந்த ‘நிஷ்கம்’ என்ற நாணயம் தவிர, சதமானம், கிருஷ்ணலம் என்றழைக்கப்பட்ட தங்க வெள்ளி நாணயங்களும் புழக்கத்திலிருந்தன.
இதிகாசங்கள் என்று அழைக்கப்படுவது – இராமாயணம், மகாபாரதம்.
பிந்தைய வேதகாலத்தில் இருந்த வேதங்கள் – யஜூர், சாம, அதர்வண.
பிந்தைய வேதகாலத்தில் வர்ணம் என்று அழைக்கப்படுவது – சாதி.
பிந்தைய வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் – கார்கி, மைத்ரேயி.
பிந்தைய வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் – நிஷ்கா, சுவர்ணா, சதமானா.
பிந்தைய வேத காலத்தில் கல்வி முறை – குருகுல கல்விமுறை.
பிந்தைய வேத காலத்தில் வணங்கிய கடவுள்கள் – பிரஜாபதி, பசுபதி, விஷ்ணு.
ரிக் வேதம் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 2024வர்க்கங்கள், 10647 மந்திரங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
ரிக் வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் ஐதரேய உபநிடதம் ஆகும். இது ‘ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.
வேதம் என்றாலே செய்யுள் என்று தான் பொருள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ரிஷியின் பெயரை கொண்டது.
மிக பழமையான மண்டலங்கள் 2 லிருந்து 9 ஆகும். புதிய சேர்ப்பு 1 மற்றும் 10 ஆகும். 10 வது மண்டலம் புருஷசுக்த மண்டலம் ஆகும். ரிக் வேதத்தில் 1028 பாடல்கள் உள்ளன.
Sama Veda | சாம வேதம்
சாம வேதத்தை பாடல் வேதம் என குறிப்பிடுகின்றனர். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது.
சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது.
“ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால் சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால் சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது.
சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.
யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. இவ்வேதம் பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது.
யஜூர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சுக்கில யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் எனப்படுகின்றன.
Atharvana Veda | அதர்வண வேதம்
அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும் சில மாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது.
அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலை ஆகும்.
நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.