இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்திய பாராளுமன்றம் என்பது, இந்திய நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட ஒரு மன்றமாகும். இந்தியா முழுவதுக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்திய நாடாளுமன்றம் மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்ற இரு அவைகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு அவைகளும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்குக் கடமையுற்றது. இந்த கட்டுரையில், நாம் இந்திய நாடாளுமன்றம் தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கவுள்ளோம்.
இந்தியாவின் சட்ட சபையாக இந்திய நாடாளுமன்றம் திகழ்கிறது. இந்திய நாடாளுமன்றம், சட்டம் இயற்றும் வேலையை மட்டும் செய்யாமல், நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி, அவர்களின் நிர்வாக தேவையை பூர்த்தி செய்வது மற்றும் நாட்டின் பாதுகாப்பு என அனைத்து பொறுப்புகளையும் கொண்டு செயல்படும் கட்டமைப்பே இந்திய நாடாளுமன்றம் ஆகும்.
இந்திய நாடாளுமன்றத்தின் அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும், இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள், இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
மக்களவை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும், அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப, பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
இந்திய நாடாளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை), கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற மொழிகள் ஆகியவற்றில், ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம்.
இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியைக் குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர்.
மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.
இந்திய நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை.
இந்திய நாடாளுமன்றத்தின் ஈரவை முறை, பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் சட்டமன்ற பேரவை (சட்டப்பேரவை) மற்றும் சட்டச்சபை என ஈரவை முறையே உள்ளது. ஆனால், பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்ற பேரவையே உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 29 மாநிலங்களுடனும், ஏழு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள், மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)
மக்களவை அல்லது லோக் சபா என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளபடி வரையறுக்கப்பட்டதாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை, இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும், குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையைக் கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்கள், மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது, இதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருட காலம் வரை நீட்டித்து முடக்கப்படலாம்.
மக்களவையைத் தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள், மக்களவையில் செயல்படுகின்றனர்.
மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை, இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபடி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என்பது, இந்திய நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து, மற்றவர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு, இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பதவிக்காலம், ஆறு ஆண்டுகள். மேலவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள், மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல், தொடர்ச்சியாக நடைபெறுவதாகும். இதன் அதிகாரங்கள், மக்களவைக்கு ஈடானதாகவும், மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது.
இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு, இரு அவைகளின் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில், மக்களவை மாநிலங்களைவையை விட, இரு மடங்கு உறுப்பினர்களைக் கொண்டதாக இருப்பினும், கூட்டு அமர்வுகளில் மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப, தற்காலிமாகக் கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று தொடங்கப்பட்டது.
சட்ட முன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்துதல், போன்றவற்றிக்காக திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதே ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கும் இடையில், ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு அவையையும் இவ்வளவு இடைவெளியில் கூட்டுவதற்கு, அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே நாடாளுமன்றம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூட்டப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம், ஒவ்வொரு ஆண்டும் மூன்று கூட்டத்தொடர்களை நடத்துகிறது.
நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர்: ஜனவரி/பிப்ரவரி முதல் மே வரை
மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை முதல் ஆகஸ்ட்/செப்டம்பர் வரை
குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர் முதல் டிசம்பர் வரை
இந்திய நாடாளுமன்ற குழுக்கள்
குறிப்பிட்ட விஷயங்களை விரிவாக ஆலோசிப்பதற்காக, நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த குழுக்களுடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள் மற்றும் குழுக்கள் முடிவுகளை எடுப்பதற்கு உதவ ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
பாராளுமன்றக் குழுக்கள் இரண்டு வகையானவை: தற்காலிகக் குழுக்கள் மற்றும் நிலைக் குழுக்கள்.
நிலைக் குழுக்கள் என்பவை நாடாளுமன்றத்தின் சட்டம் அல்லது நடைமுறை விதிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அலுவல் நடத்தை விதிகளின்படி, அவ்வப்போது அமைக்கப்படும் நிரந்தரக் குழுக்களாகும். இந்தக் குழுக்களின் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
தற்காலிக குழுக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நியமிக்கப்படுகின்றன, மேலும் அவை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பின்பு, அவை கலைந்துவிடுகின்றன.
நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் எனப்படும் இம்மண்டபம், வட்ட வடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள், சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர்.
பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான இவர்கள், 1912-1913 ஆண்டுகளில் இதை வடிவமைத்து, இதன் கட்டுமானத்தை 1921 இல் தொடங்கி, பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the council of states), மைய சட்டமன்றத்திற்காகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது.
8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே, இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.
இதன் வெளி கட்டுமான சுவர், 144 பளிங்குத் தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனின்று செல்வதற்கு வசதியாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.
இந்திய நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரங்கள் மற்றும் பணிகள்
சட்ட அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம் சட்ட அதிகாரங்கள் சட்டம் இயற்றுவதற்கானவை. நிதி அதிகாரங்கள் நிதிநிலை அறிக்கை என்று அறியப்படுகிற நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது.
இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.
இந்திய நாடாளுமன்றத்தின் அங்கமான குடியரசுத் தலைவர், தேர்தல் குழுமம் எனப்படும் எலெக்டோரல் காலேஜ் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எலெக்டோரல் காலேஜ் என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில உறுப்பினர்கள் அடங்கிய குழுவாகும். நாடாளுமன்றத்தின் செயல் தலைவராக அழைக்கப்படுபவர் இந்திய குடியரசுத் தலைவராவார். நாட்டில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்தும், அவரது பெயரால் கொண்டு வரப்படுகின்றன. அதாவது, அவர் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் மட்டுமே சட்டமாகும்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய குடியரசுத் தலைவரின் பணி சிறந்த ஒன்றாகும்.
நாட்டின் பிரதமர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தல்.
ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் புதிதாக நாடாளுமன்றத்தை கூட்டி, உரையாற்றுவது.
ஏதேனும் மசோதாக்களிடையே, இரு அவைகளுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு, கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண்பது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும், சிறப்புரிமைகளும்
நாடாளுமன்றத்தில் அல்லது எந்த ஒரு குழுவிலும், ஒரு உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து, எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.
ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை, கட்டுரை, வாக்குகள் அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக, எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு, நீதி மன்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் உண்மையான எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு, பிரசுரம் தவறான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும், உரிமையியல் வழக்குகளின் கீழ், ஒரு உறுப்பினரை கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம்.
நாடாளுமன்ற வளாகத்தினுள், ஒரு உறுப்பினருக்கு சட்ட நடவடிக்கை அறிக்கை அளிப்பது அல்லது கைது ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Coupon code- NOV75-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*