இந்திய அரசியலமைப்பு தினம் | Constitution Day Of India
Published by
bsudharshana
2 years ago
இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் எனப்படும் இந்த நாள், 2015 நவம்பர் 26 ஆம் தேதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, இந்திய அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கட்டுரையில், நாம் இந்திய அரசியலமைப்பு தினம் தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கவுள்ளோம்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949 இல் நவம்பர் 26 ஆம் தேதியன்று, இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான், நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது, சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு) எடுத்து கொள்ளப்பட்டது. பின்னர் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட, கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன. அடுத்த 2 நாட்களில், அவை இந்தியாவின் சட்டமாக மாறின.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும், இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால், 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் இந்திய அரசியலமைப்பு தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் அமைப்பதற்காக, ஒரு சபையை உருவாக்க வேண்டும் என்று, 1934ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.ராய் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவும், சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியர்களால் அமைக்கப்பட வேண்டும் என்றார். இந்தியர்களின் இந்தக் கோரிக்கையை ஆங்கிலேயே அரசு 1940 ஆம் ஆண்டு அளித்த ‘ஆகஸ்ட் ஆஃபர்’ என்னும் உடன்படிக்கையில் ஒப்புக் கொண்டது.
1942 ஆம் ஆண்டு பிரித்தானிய கேபினட் உறுப்பினர் ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கான பிரித்தானிய அரசின் பரிந்துரையுடன் இந்தியா வந்தார். இந்தப் பரிந்துரைகளை வைத்து, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் பின்னர், 1946 ஆம் ஆண்டு பிரித்தானியத்திலிருந்து ‘கேபினட் மிஷன்’ என்ற குழு தங்களது பரிந்துரைகளுடன் இந்தியா வந்தது. அதில் இந்தியர்கள் நிறைந்த அரசியலமைப்புப் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு, அந்தச் சபை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியர்கள் ஒப்புதல் அளித்தனர்.
‘கேபினட் மிஷன்’ குழுவின் பரிந்துரையின் படி, 1946 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அப்போது மொத்தம் 389 உறுப்பினர்கள் இந்தச் சபையில் இருந்தனர். இந்தச் சபையின் முதல் கூட்டம், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று நடைபெற்றது. எனினும் இந்தக் கூட்டத்தை முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் புறக்கனித்தனர். எனவே, 211 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
1949 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி, ‘Objectives Resolution’ என்ற தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு கொண்டு வந்தார். இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்க வேண்டிய, முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் அடிப்படை கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்தத் தீர்மானம் 1947 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, பாகிஸ்தான் தனி நாடாக உருவெடுத்ததால், அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 299 ஆக குறைந்தது.
அரசியலமைப்பு நிர்ணய சபையில், 8 முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மிகவும் முக்கியமான குழு தான் அரசியலமைப்புச் சட்ட வடிவத்தை இயற்றும் குழு (Drafting Committee). இந்தக் குழுவிற்கு டாக்டர். அம்பேத்கர் தலைவராக இருந்தார். இந்தக் குழுவானது, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வடிவத்தை 1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன் பின்பு மக்கள் கருத்து மற்றும் இதர உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வரைவு தயாரிக்கப்பட்டது.
இறுதியில் 1949 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 395 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள் இருந்தன.
பெரிய வடிவிலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்து, மேற்கத்திய வல்லுநர்கள் சிலர் விமர்சனம் செய்தனர். குறிப்பாக சர் ஐவர் ஜென்னிங்ஸ், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் பெரியது, நடைமுறை படுத்த மிகவும் கடினமானது” எனத் தெரிவித்தார். அதேபோல பலர் இந்திய அரசியலமைப்புச் சட்டம், குறுகிய காலம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்பு, கடந்த 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் இந்திய அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. அரசியலமைப்பின் இறுதி வடிவம், 395 சரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் ஈர்க்கப்பட்டு, இந்திய அரசியல் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக, அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சாசனம், கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.
கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
அசல் கையெழுத்து ஆவணத்தில், 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு, இந்திய அரசு சட்டம் 1935 ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று, அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு தினமானது, அரசியலமைப்பின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், அம்பேத்கரின் லட்சியங்களையும், சிந்தனைகளையும் மக்களிடையே பரப்பவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக இந்த நாள், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பின் படி, இந்தியா ஒரு இறையாண்மை, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடாகும்.
இந்திய அரசியலமைப்பு, நாட்டு குடிமக்களுக்கான நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது. இதனிடையே அரசியலமைப்பின் சித்தாந்தத்தை நிலைநிறுத்த மற்றும் கடைப்பிடிக்க நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த, அரசியலமைப்பின் முகவுரையை வாசிப்பது இந்நாளில் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Coupon code- NOV75-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம்.…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம்.…