இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
மிண்டோ–மார்லி சீர்திருத்தங்கள் (1909)
அறிமுகம்:
1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மிண்டோ–மார்லி சீர்திருத்தங்கள் என்றும் அழைக்கப்படுகிறது இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மார்லி பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநர் மிண்டோ பிரபு, இவ்விருவரும் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக இருந்தனர் காங்கிரசிலிருந்து மிதவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது
இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:
- மத்திய சட்டசபையிலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆகும். மீதமுள்ள நியமிக்கப்பட்டவர்கள் 33 பேரில் 28 பேர்களுக்குமேல், அதிகாரிகள் இருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டது.
- சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்ற கருத்து சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், முஸ்லீம்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு முதன்முறையாக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
- பெரிய மாகாணங்களின் சட்டமன்றங்களில் இருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது.
- வரவு – செலவு அறிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் குறித்த விவகாரங்களைப்பற்றி விவாதிக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும் சட்டமன்றங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால், வரவு – செலவு அறிக்கை மீதான விவாதத்திற்கு தலைமை ஆளுநர் அனுமதி அளிக்க மறுக்கலாம்.
- தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா என்பவராவார்.
- பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியர்களை இப்பதவிகளுக்கு நியமிக்கும் வழக்கமும் தொடங்கியது.
- இங்கிலாந்திலுருந்த இந்தியா கவுன்சிலிலும் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர்.
முடிவுரை:
இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தும் நோக்கம் மிண்டோ – மார்லி சீர்திருத்தங்களுக்கு கிடையாது இருப்பினும், இது தாராளமான நடவடிக்கையே என்று கருதிய மிதவாதிகள் இந்த சீர்திருத்தங்களை வரவேற்றனர் தனித்தொகுதிகளை ஒதுக்குதல் என்ற கோட்பாடு 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்கு இட்டுச் சென்றது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |