Tamil govt jobs   »   Study Materials   »   Tughlaq Dynasty for TNPSC

Tughlaq Dynasty for TNPSC | துக்ளக் வம்சம்

துக்ளக் வம்சம் மத்தியகால இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த ஒரு சன்னி இசுலாமிய மரபாகும். துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்சத்தின் கடைசி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்சம் ஆனது, தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டது. Tughlaq Dynasty பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கவுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Tughlaq Dynasty Overview | துக்ளக் வம்சம் ஒரு கண்ணோட்டம்

Tughlaq Dynasty
Tughlaq Dynasty
  • துக்ளக் வம்சம் கியாசுத்தீன் துக்ளக் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் கால்சிகளின் கீழ் படைத் தளபதியாக இருந்தார்.
  • துக்ளக்குகள் ஆப்கானிசுத்தானைச் சேர்ந்த துருக்கிய இன மரபினர். எனினும் இவர்கள் நீண்ட காலம் இந்தியாவில் வாழ்ந்து பஞ்சாப் பகுதியின் ராசபுத்திரர், சாட்டுகள் போன்றோரோடு மண உறவும் கொண்டிருந்தனர்.
  • கியாசுத்தீனைத் தொடர்ந்து முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு வந்தார். இவர் உயர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒருவர். பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இவரே மூல காரணமாக இருந்தார். எனினும், சரியான திட்டம் இன்மையால், தோல்வியடைய நேரிட்டது. சமூகத்தின் மரபுவாதம் சாராத, துருக்கியச் சார்பற்ற பிரிவுகளை இவர் விரும்பினார். இவரது ஆட்சிக் காலத்தின்போது, இசுலாமியர்கள் பலம் வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர்.
  • இவரது வாரிசான ஃபைரூசு கான் சா, முகம்மது பின் துக்ளக்கின் கொள்கைகளை முற்றாக மாற்றினார். இவர் மரபுவாத சுன்னி இசுலாமியராகவும், மதம் தொடர்பில் குருட்டுப் பிடிவாதம் கொண்டவராகவும் இருந்தார். இந்துக்களையும், சியா இசுலாமியர்களையும் ஒடுக்கினார். தாயக முசுலிம்கள் மீது எதிர்ப்புணர்ச்சி கொண்டவராகவும் இவர் இருந்ததுடன், அரச பதவிகள் பரம்பரை வழி தொடர்வதற்கும் ஏற்பாடு செய்தார். இதனால், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருக்கும் இசுலாமியர்கள், உயர் பதவிகளுக்கு வருவது முடியாமல் போனது. இவரது இறப்புக்குப் பின் பேரரசின் வலு பெருமளவு குறைந்து போனது.

Also Read : டெல்லி சுல்தானியம் | The Delhi Sultanate For TNPSC | RRB NTPC

Tughlaq Dynasty Origin | துக்ளக் வம்சத்தின் தோற்றம்

  • 1320க்கு முன் டெல்லி சுல்தானகத்தை கில்ஜி வம்சம் ஆண்டது. அதன் கடைசி ஆட்சியாளர், குஸ்ரோ கான், ஒரு இந்து அடிமை, அவர் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார், பின்னர் டெல்லி சுல்தானகத்தின் இராணுவத்தின் தளபதியாக சில காலம் பணியாற்றினார்.
  • குஸ்ரோ கான், மாலிக் கஃபூருடன் சேர்ந்து, அலாவுதீன் கில்ஜியின் சார்பாக, சுல்தானகத்தை விரிவுபடுத்தவும், இந்தியாவில் உள்ள இசுலாமியம் அல்லாத ராஜ்ஜியங்களைக் கைப்பற்ற, பல இராணுவப் போர்களுக்கு தலைமை தாங்கினார்.
  • 1316ல் அலாவுதீன் கில்ஜி இறந்தார். அலாவுதீன் கில்ஜியைத் தொடர்ந்து முபாரக் ஷா, குஸ்ருஷா இருவரும் ஆட்சிக்கு வந்தனர்.
  • திபல்பூரின் ஆளுநரான காஸி மாலிக், குஸ்ருஷாவைக் கொன்றுவிட்டு, 1320ல் கியாசுதீன் துக்ளக் என்ற பட்டத்துடன் டெல்லி அரியணையேறினார்.

Also Read : Khilji Dynasty for TNPSC | கில்ஜி வம்சம்

Important Rulers of Tughlaq Dynasty | துக்ளக் வம்சத்தின் முக்கியமான ஆட்சியாளர்கள்

Ghiyasuddin Tughlaq | கியாசுதீன் துக்ளக் (1320-1324)

Ghiyasuddin Tughlaq
Ghiyasuddin Tughlaq
  • கியாசுதீன் துக்ளக், துக்ளக் வம்சத்தை நிறுவியவர். அவர் தனது மகன் ஜினாகான் என்பவரை வாரங்கல்லுக்கெதிராக படையுடன் அனுப்பி வைத்தார்.
  • பிரதாபருத்ரனை முறியடித்து பெரும் பொருளுடன் ஜினாகான் நாடு திரும்பியவுடன், தனது தந்தையை சதி செய்து கொன்றுவிட்டு, 1325 ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் அரியணையேறினார்.
  • கியாசுதீன் தனது ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அருகில் துக்ளகாபாத் நகருக்கு அடிகோலினார்.

Also Read : மகாபலிபுரத்தில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை பகுதி-1 | TNPSC Group1 And 2/2A Exams

Muhammad bin Tughlaq | முகம்மது பின் துக்ளக் (1325-1351)

Muhammad bin Tughlaq
Muhammad bin Tughlaq
  • இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட முகம்மது பின் துக்ளக் தில்லி சுல்தானகத்தை ஆண்ட சுல்தானும், துக்ளக் வம்சத்தில் தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். இடைக்கால இந்திய வரலாற்றில் தனிச்சிறப்பான குணம் கொண்டவராக முகமது பின் துக்ளக் விளங்கினார்.
  • கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவர் முல்தான் என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது மனைவி திபல்புரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.
  • முகம்மது துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாது மருத்துவத்திலும் தத்துவ வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். பாரசீகம், அரபு, துருக்கி மற்றும் சமஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
  • தேவகிரிக்கு தலைநகர் மாற்றம்

முகமது பின் துக்ளக் தேவகிரியை தனது இரண்டாவது தலைநகராக்க விரும்பினார். தென்னிந்தியாமீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. 1327 ஆம் ஆண்டு அதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தேவகிரிக்கு தௌலதாபாத் என்று பெயரிடப்பட்டது. புதிய தலைநகருக்கு செல்ல மறுத்தவர்கள் மீது, சுல்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். இதனால், டெல்லி மக்கள் பெரும் துன்பங்களுக்காளாயினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுல்தான் தௌலாதாபாத்தைக் கைவிட்டு, மீண்டும் அனைவரையும் டெல்லிக்கு திரும்புமாறு பணித்தார்.

  • அடையாள நாணயம்

1329 – 38 ஆண்டுகளில் முகமது பின் துக்ளக் அடையாள நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.

  • தோ ஆப் பகுதியில் வரி விதிப்பு

சுல்தான் நடைமுறைப்படுத்திய பல திட்டங்கள் படுதோல்வியடைந்த காரணத்தினால், அவரது கௌரவம் பாதிக்கப்பட்டதோடு நிதிச்சிக்கலும் ஏற்பட்டது. எனவே, முகமது பின் துக்ளக், தோ ஆப் பகுதியில் வசிப்பவர்களின் நிலவரியை உயர்த்தினார். (தோ ஆப் என்பது கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாகும்). அப்போது கொடிய பஞ்சம், அப்பகுதியில் தலை விரித்தாடியது. எனவே, வரிச் சுமையை தாங்கமுடியாமல், மக்கள் நிலங்களை விட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள்.

  • வேளாண் சீர்திருத்தங்கள்

நிவாரண நடவடிக்கை வழங்குவதும், வேளாண்மையை முன்னேற்றுவதுமே பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியும் என்பதை சுல்தான் தாமதமாகவே உணர்ந்தார். மக்கள் விதைகள் வாங்கவும், வேளாண்மையைப் பெருக்கவும், தக்காவிக் கடன்கள் வழங்கும் திட்டத்தை சுல்தான் அறிவித்தார். திவானி கோஹி என்ற வேளாண்துறை ஒன்றையும் அவர் ஏற்படுத்தினார்.

  • முகமது பின் துக்ளக் ஆட்சியின் பிற்பகுதியில், உயர்குடியினரும் மாகாண ஆளுநர்களும் பல்வேறு இடங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
  • மதுரையில் ஹசன் ஷா கிளர்ச்சி செய்து சுதந்திர மதுரை சுல்தானியத்தை நிறுவினார்.
  • 1336ல் விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. 1347ல் பாமினி அரசு நிறுவப்பட்டது.
  • குஜராத்தில் தகி மேற்கொண்டிருந்த கிளர்ச்சியை அடக்கச் சென்ற முகமது பின் துக்ளக் மூன்று ஆண்டுகள் அவனை விரட்டுவதில் செலவழித்தார். இதனால், நோய்வாய்ப்பட்ட அவர் 1351ல் இறந்தார்.
  • மொரோக்கோ நாட்டு பயணியான இப்னு பதூதா இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார்.

Also Read : Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்

 Feroz Shah Tughlaq |ஃபெரோஸ் ஷா துக்ளக் (1351-1388)

Feroz Shah Tughlaq
Feroz Shah Tughlaq
  • 1351ல் முகமது பின் துக்ளக் மறைந்தபின், ஃபெரோஸ் துக்ளக்கை உயர்குடியினர் டெல்லி சுல்தானாக அமர வைத்தனர். தெலுங்கு பிராமண முஸ்லிமான கான்-இ-ஜஹான் மக்பால் என்பவரை வாசிர் (முதலமைச்சர்) பதவிக்கு, ஃபெரோஸ் துக்ளக் நியமித்தார். அவரது ஆலோசனைப்படி, சுல்தான் ஆட்சி நடத்தி சுல்தானியத்தின் பெருமையைப் பாதுகாத்தார்.
  • டெல்லி சுல்தானியத்தை சிதறவிடாமல், காப்பாற்றுவதே பிரோஸ் துக்ளக்கின் கடமையாக இருந்தது. தக்காணத்திலும், தென்னிந்தியாவிலும், சுல்தானியத்தை விரிவுபடுத்துவதைவிட, வடஇந்தியாவில் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே முயற்சித்தார். ஜஜ்நகர் (தற்கால ஒரிசா) மீது படையெடுத்துச் சென்ற பிரோஸ் ஷா பெரும் செல்வத்துடன் திரும்பினார். நாகர்கோட் மீது படையெடுத்து, அதன் ஆட்சியாளரை சிறையிலிட்டார். அப்படையெடுப்பின்போது, ஜ்வாலாமுகி ஆலய நூலகத்திலிருந்த 1300 வடமொழிச் சுவடிகளைக் கொண்டு வந்தார். அவற்றை பாரசீக மொழியில் மொழி பெயர்க்கச் செய்தார்.
  • உயர்குடியினரை ஆதரித்த அவர், அவர்கள் தங்களது சொத்துக்களை பரம்பரை வாரிசுகளுக்கு வழங்கவும் அனுமதித்தார். இக்தா முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது. வாரிசுகளுக்கும் அவை சென்றுசேர வழிவகுக்கப்பட்டது. இஸ்லாமியச் சட்டப்படி அவர் வரிகளை விதித்தார்.
  • இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. இவர் நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான் ஆவார். நீர்ப்பாசனதுக்காக பல கால்வாய்களையும், கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தார். சத்லஜ் முதல் ஹான்சி வரை, 200 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட கால்வாயே அவற்றில் மிக நீளமானதாகும். இஸ்லாமிய சட்டத்தில் இடம் இல்லை என்பதால், 28 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரிகளையும் ரத்து செய்தார். கர்கானாக்கள் என்றழைக்கப்பட்ட அரண்மனைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும், அவர் அமைத்தார். அவற்றில் ஆயிரக்கணக்கான அடிமைகள் வேலை செய்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட நகரங்கள் நிறுவப்பட்டன. தற்காலத்தில் பிரோஸ் ஷா கோட்லா எனப்படுகிற பிரோசாபாத் நகரம், டெல்லி செங்கோட்டைச்கு அருகே அமைக்கப்பட்டது.
  • திவானி கைரத் என்ற புதிய துறை, அனாதைகள் மற்றும் கைம்பெண்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இலவச மருத்துவமனைகளும் ஏழை முஸ்லிம்களுக்கு திருமண ஆலோசனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாகவேக் கருதி ஜிஸ்யா வரியை கட்டாயமாக்கினார்.
  • தோற்கடிக்கப்பட்ட வீரர்களை அடிமைகளாக்கியதால், அவரது ஆட்சியின்போது அடிமைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பதாயிரத்தைத் தாண்டியது. 1388ல் பிரோஸ் இறந்தபோது, சுல்தானுக்கும் உயர்குடியினருக்குமிடையிலான பூசல்கள் மீண்டும் தலையெடுத்தன.

Also Read : மௌரியப் பேரரசு (322-185) BCE | TNPSC குரூப்1, குரூப்2/2A

Tughlaq Dynasty Architecture | துக்ளக் வம்சத்தின் கட்டிடக்கலை

Tughlaqabad Fort | துக்ளகாபாத் கோட்டை

Tughlaqabad Fort
Tughlaqabad Fort
  • துக்ளகாபாத் கோட்டை டெல்லியில் உள்ள ஒரு கோட்டையாகும். இது 1321 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிறுவனர், கியாஸ்-உத்-தின் துக்ளக் என்பவர் நான்காவது வரலாற்று நகரமான டெல்லியை நிறுவியபோது கட்டப்பட்டதாகும்.
  • புதிய நகரத்தை, பெரும் தலைநெடுஞ்சாலையுடன் இணைக்கும் குதுப் – பதர்பூர் சாலையையும் துக்ளக் கட்டினார். இந்த சாலை இப்போது மெக்ராலி-பதர்பூர் சாலை என்று அழைக்கப்படுகிறது.

Also Read : மகாபலிபுரத்தில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை பகுதி-2 | TNPSC Group1 and 2/2A Exams

Feroz Shah Kotla | ஃபெரோஸ் ஷா கோட்லா

Feroz Shah Kotla
Feroz Shah Kotla
  • ஃபெரோஸ் ஷா கோட்லா என்பது ஃபெரோஸ் ஷா துக்ளக்கால் நிறுவப்பட்ட ஒரு கோட்டை.
  • தில்லி சுல்தானாக இருந்த ஃபெரோஸ் ஷா துக்ளக், யமுனை நதிக்கரையில் தனது பெயரில் ஃபெரோஸாபாத் என்ற தலைநகரை உருவாக்கி, அங்கே இக்கோட்டையை நிறுவினார். அம்பாலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அசோகர் காலத்து ஸ்தூபி, இக்கோட்டையின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
  • 1947 இன் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சீக்கியர்கள் மற்றும் சில இந்துக்கள் தற்காலிகமாக இக்கோட்டையில் தங்க வைக்கப்பட்டனர்.

Mausoleum of Ghiyas ud-Din Tughlaq | கியாஸ் உத்-தின் துக்ளக்கின் கல்லறை

Mausoleum of Ghiyas ud-Din Tughlaq
Mausoleum of Ghiyas ud-Din Tughlaq
  • கியாஸ் உத்-தின் துக்ளக்கின் கல்லறையின் வளாகம், சிவப்பு மணற்கற்களால் ஆன உயரமான நுழைவாயிலால் அமைந்துள்ளது. உண்மையான கல்லறை ஒற்றை-குவிமாடம் கொண்ட சதுர கல்லறை (சுமார் 8 மீ x8 மீ), சாய்வான சுவர்களைக் கொண்டுள்ளது.
  • கருங்கல்லால் ஆன கோட்டையின் சுவர்களுக்கு மாறாக, கல்லறையின் பக்கங்களும் மென்மையான சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கதவுகள் பளிங்குகளில் பொறிக்கப்பட்டு வளைவு எல்லைகளுடன் பதிக்கப்பட்டுள்ளன.
  • பளிங்கு மற்றும் கற்பலகையின் வெள்ளை அடுக்குகளால் மூடப்பட்டு எண்கோணத்தில் அமைந்திருக்கும் ஒரு நேர்த்தியான குவிமாடம், இந்த மாளிகையில் முதலிடம் வகிக்கிறது.

Downfall of Tughlaq Dynasty | துக்ளக் வம்சத்தின் வீழ்ச்சி

துக்ளக் வம்சத்தின் ஆட்சியின்போது மாளவம், குஜராத் போன்ற மாகாணங்கள் விடுதலையை அறிவித்துக் கொண்டன. 1398 ஆம் ஆண்டு நடைபெற்ற தைமூரின் படையெடுப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது. டெல்லிக்குள் தைமூர் நுழைந்தபோது, எதிர்ப்பதற்கு எவருமில்லை. மூன்று நாட்கள் டெல்லியை சூறையாடிய தைமூர், ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று ஏராளமான செல்வத்தை கொள்ளையிட்டார். 1399ல் அவர் இந்தியாவை விட்டகன்றார். தைமூரின் படையெடுப்பு துக்ளக் வம்ச ஆட்சிக்கு பேரிடியாக அமைந்தது. முல்தான் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கிஜர் கானால், துக்ளக் வம்சத்தின் அதிகாரம் வீழ்ச்சியடைந்து. இதன் விளைவாக, சயீத் வம்சத்தினர் டெல்லி சுல்தானகத்தின் புதிய ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

Also Read : Best Study Materials For TNPSC | TNPSC க்கான சிறந்த பாட புத்தகங்கள்

முடிவுரை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

*****************************************************

Coupon code- NOV75-75% OFFER

ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group