சிலப்பதிகாரம் : சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்’ எனவும் வழங்கப்படுகிறது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றி இதில் விரிவாக காணலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
சிலப்பதிகாரம் முன்னோட்டம்
இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
சிலப்பதிகாரத்தின் காலம்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் . நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது. புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
சிலப்பதிகாரத்தின் நூலமைப்பு
காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம் , நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள்
- புகார்க் காண்டம்
- மதுரைக் காண்டம்
- வஞ்சிக் காண்டம்
இந்த 3 காண்டங்களை பற்றி பின்வருமாறு காணலாம்.
Read Also : பொது அறிவு வினா விடை | GENERAL AWARENESS QUIZ For TNPSC [28 October 2021]
புகார்க்காண்டம்
இது 10 காதைகளைக் கொண்டது.அவை,
- மங்கல வாழ்த்துப் பாடல்
- மனையறம் படுத்த காதை.
- அரங்கேற்று காதை.
- அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
- கடல் ஆடு காதை.
- கானல் வரி
- வேனிற்காதை
- கனாத் திறம் உரைத்த காதை.
- நாடு காண் காதை
மதுரைக் காண்டம்
இது 13 காதைகளைக் கொண்டது. அவை,
- காடு காண் காதை
- வேட்டுவ வரி
- புறஞ்சேரி இறுத்த காதை
- ஊர் காண் காதைஅடைக்கலக் காதை
- கொலைக்களக் காதை
- ஆய்ச்சியர் குரவை
- துன்ப மாலை
- ஊர் சூழ் வரி
- வழக்குரை காதை
- வஞ்சின மாலை
- அழற்படுகாதை
- கட்டுரை காதை
என்பவை ஆகும்.
வஞ்சிக் காண்டம்
இது ஏழு காதைகளைக் கொண்டது.
- குன்றக் குரவை
- காட்சிக் காதை
- கால்கோள் காதை
- நீர்ப்படைக் காதை
- நடுகற் காதை
- வாழ்த்துக் காதை
- வரம் தரு காதை
என்பவை ஆகும்.
சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்கள்
- கண்ணகி – பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.
- கோவலன் – பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.
- மாதவி – பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.
சிலம்பு உணர்த்தும் முப்பெரும் உண்மைகள்:
- அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும்,
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பனவாம்.
விளக்கம்:
அரசியல் பிழைத் தோர்க்கு அறமே கூற்றாக அமைந்து அவர் உயிரைப் போக்குவதும், புகழ் மிகுந்த பத்தினிக்கு சான்றோரின் போற்றுதல் உண்டாகும் என்பதும், மேலும், முன் செய்த ஊழ்வினையானது பிற் பிறவியில் சினந்துவந்து, அதற்குரிய பயனை ஒருவருக்கு ஊட்டும் என்பதையும் சிலப்பதிகாரம் நமக்கு காட்டிய வாழ்வியல் நெறிகள், அதை விளக்கும் விதமாகவே இந்த காப்பியத்தை இளங்கோவடிகள் இயற்றினார் என்றார் அது மிகையல்ல.
மணிமேகலை
மணிமேகலை : மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
மணிமேகலையின் காலம்
மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.
மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஆ. 450 – பொ.ஆ. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.
பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார். இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
Read Also : Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்
மணிமேகலையில் வரும் கதை
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் உவவனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை ‘அமுத சுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகித் தவத்தில் ஆழ்ந்தாள்.
Also Read : மௌரியப் பேரரசு (322-185) BCE | TNPSC குரூப்1, குரூப்2/2A
மணிமேகலையில் வரும் கதாப்பாத்திரங்கள்
- மணிமேகலை – கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தன் தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.
- உதயகுமரன் – சோழ மன்னன், மணிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவள் துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், காஞ்சனன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.
- சுதமதி – மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததைக் கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலகட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஓர் இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.
மணிமேகலையில் சமயநெறி
கி. மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்த, சமணச் சமயங்கள் தோன்றின. அதற்குப் பின்னர்க் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய சமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன. ‘சமயம்’ என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. தெய்வம் என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களில் மணிமேகலை, பழமொழி ஆகியவற்றில் மட்டும் வருகிறது. புத்த மதம் கி. மு. 527-லும், சமண மதம் கி. மு. 527-லும் தோன்றின. இவை இரண்டும் ஏறத்தாழ சமகாலம் என்றாலும் புத்தர் துறவு 17 ஆண்டுகள் முந்தியது எனத் தெரிகிறது.
சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் கி.பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.
மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். ஆக கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது. அவற்றைப் பின்பற்றிய சமயத் தலைமக்களை (சமயக் கணக்கர்களை) மணிமேகலை நூலிலுள்ள சொற்களைக் கொண்டு இங்கு அகரவரிசைப் படுத்திக் காண்கிறோம்.
Also Read : Best Study Materials For TNPSC | TNPSC க்கான சிறந்த பாட புத்தகங்கள்
10 சமயக் கணக்கர்
- ஆசீவகவாதி
- சாங்கியவாதி
- சைவவாதி
- நிகண்டவாதி
- பிரமவாதி
- பூதவாதி
- பௌத்தவாதி
- வேதவாதி
- வைசேடிகவாதி
- வைதிகவாதி
மணிமேகலையின் காப்பியச் சிறப்பு
இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்களில் தனி மனித வாழ்வு நிலை, சமய நிலை, சமுதாய நிலை ஆகிய மூன்றினையும் அறிந்து கொள்ளலாம். இம்மூன்று நிலைகளிலும் மனித வாழ்வு செம்மை அடைவதற்காக அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதே மணிமேகலைக் காப்பியமாகும்.
மணிமேகலையின் மூன்று கருத்துகள்
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
மணிமேகலையின் காப்பியப் பெருமை
ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையது.
முடிவுரை
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
*****************************************************
Coupon code- FEST75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group